புதன், 26 ஏப்ரல், 2017

சண்டிதேவி கோவில் மற்றும் மாயா தேவி கோவில் ஹரித்துவார்

சண்டிதேவி கோவில்
மானசா தேவி கோவில் பதிவு எழுதிய அடுத்த வாரமே சண்டி தேவி பதிவும் எழுத வேண்டியது. பல்வேறு காரணங்களால் இந்த பதிவு எழுத தாமதமாகி விட்டது.

இந்த கோவிலில் இருக்கும் சண்டி தேவி ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என நம்படுகிறது. இருந்தாலும் 1929 ஆம் ஆண்டு காஷ்மீர் மன்னரால் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இதுவும் ஒரு சக்தி பீடமே. ஹரித்வாரில் 3 சக்தி பீடங்கள் உள்ளன. ஒன்று மானசா தேவி, மற்ற இரண்டும் சண்டி தேவி ,மாயா தேவி ஆகியவைகளாகும். சண்டி தேவிக்கு இன்னொரு பெயர் சண்டிகா. தேவி. சிவனின் காலடி என சொல்லப்படும் கங்கா ஆரத்தி நடக்கும் இடத்திலிருந்து சுமார் 4 கி. மீ தொலைவில் இந்த கோவில் அடிவாரம் உள்ளது. இங்கும் ரோப் காரில் மலை மேலே கொண்டு விடுகிறார்கள். பின்பு அங்கு சிறிது உயரத்திலுள்ள மலை மீதுள்ள கோவிலுக்கு படிகள் வழி செல்ல வேண்டும். படிகளின் இரண்டு புறமும் எக்கச்சக்கமாக குரங்குகள் இருப்பதை காணலாம்



இந்த மலைக்கு நேர் எதிரில் இன்னொரு சிறிய மலையும் மலை உச்சியில் இன்னொரு கோவிலும் உள்ளது . அது அநுமனின் தாயார் அஞ்சனை மாதாவின் கோவில். அந்த கோவிலுக்கு நடந்து தான் போக வேண்டும். அந்த மலை ஏறமுடியாதென்பதால் நாங்கள் அங்கு செல்லவில்லை.

ஸ்தல புராணம்: சும்பன் நிசும்பன் என இரண்டு அரக்கர்கள் இந்திரலோகத்தை அடைந்து இந்திரனை அங்கிருந்து விரட்டி அடிக்கிறார்கள். கடவுளின் தப வலிமையால் பார்வதி தேவி சண்டிதேவியின் உருவில் அவதாரம் எடுக்கிறாள். சண்டி தேவியின் அழகில் மயங்கிய அசுரன் சும்பன் சண்டியை மணக்க விரும்புகிறான். சண்டி தேவி மறுக்கவும் சண்டா முண்டா என்ற இரண்டு அரக்கர்களை அனுப்பி சண்டி தேவியை கொலை செய்ய சொல்கிறான். ஆனால் கோபமுற்ற சண்டி தேவி சாமுண்டா என்ற அரக்கனின் ரூபத்தில் சும்பனையும் நிசும்பனையும் வதம் செய்கிறாள். அதன் பிறகு இந்த நீல பர்வதத்தின் மேல் வந்து சற்று நேரம் ஓய்வெடுக்கிறாள். அந்த புராணக்கதையை குறிக்க இந்த மலை மேல் இந்த கோவில் எழுப்பபட்டதாக சொலப்படுகிறது. அதனாலயே இந்த மலையில் உள்ள இரண்டு சிகரங்களுக்கும் பெயர்கள் சும்பன் என்றும் நிசும்பன் என்றும் வைக்கபட்டுள்ளது.

ஹரியானா ,மகாராஷ்ட்ரா ,நேபால் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் போன்ற பல வட மாநிலங்களிலும் பல ஊர்களில் சண்டி தேவி கோவில்கள் மிகவும் பிரசித்தம். பார்வதியின் ஒரு அவதாரமாகவே சண்டி தேவியை வட இந்திய மக்கள் வழிபடுகிறார்கள். சண்டிகர் நகரத்திற்கு அந்த பெயர் வர காரணமே அங்குள்ள சண்டி தேவி ஆலயம் தான்.


மாயா தேவி கோவில் 

மாயாதேவி கோவில் ஹரித்வார் நகருக்குள்ளே இருக்கிறது, மாயா தேவி கோவிலும் ஒரு சக்தி பீடமே. ஹரித்வார் செல்பவர்கள் முக்கியமாக இந்த 3  சக்தி பீடங்களும் தரிசனம் செய்கிறார்கள். மாயாதேவி மூன்று தலை நான்கு கைகளுடன் கூடிய ஒரு அம்மன். ஹரித்வார் ஒரு காலத்தில் மாயாபுரி என்றே அழைக்கபட்டிருந்தது

 
காளி தேவி, மாயா தேவி, காம்க்யா தேவி 
இந்த கோவிலில் மூல ஸ்தானத்தில் 3 அம்மன் சிலைகள் உள்ளது. நடுவில் மாய தேவியும் இடது புறம் காளியும் வலது புறம் காம்க்யா தேவியும் உள்ளனர். காம்க்யா தேவி என்பது தென்னிந்தியாவில் நாம் வழிபடும் திருபுரசுந்தரி தான். மிக சிறிய கோவில் தான் ஆனால் புராதனமானது.

அடுத்த பதிவில் ஹரித்வாரில் உள்ள மிக பழமையான பில்கேசவ் மகாதேவ் கோவில் மற்றும் தக்ஷேஸ்வர் மகாதேவா கோவில் பற்றி எழுத உள்ளேன். 




கருத்துகள் இல்லை: