வியாழன், 23 பிப்ரவரி, 2017

மானசா தேவி கோவில் ஹரித்வார்

மானசா தேவி கோவில் ஹரித்வார்


ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ்  பயணத்தின் போது தரிசத்த கோவில்களை பற்றி எழுத உள்ளேன். முதலில் ஹரித்வார் சென்றடைந்தோம். டெராடூன் வரை விமான பயணம்,பின்பு அங்கிருந்து சாலை வழியாக ஹரித்வார் சென்றடைந்தோம், சுமார் 52 கி. மீ சாலை வழி பயணம். ஹரித்வாரில் இரண்டு மலை கோவில்கள் பிரசித்தம். ஒன்று மானசா தேவி கோவில். மற்றொன்று சண்டி தேவி கோவில். இரண்டு கோவில்களும் எதிர் எதிர் உள்ள இரண்டு மலைகளின் உச்சியில் உள்ளது. இரண்டு மலைகளுக்கு நடுவில் சுமார் 4கி.மீ இடைவெளி இருக்கும். இந்த பகுதியில் தான் கங்கை நதி ஓடுகிறது. இரண்டு கோவில்களுக்கும் ரோப் காரில் தான் செல்ல வேண்டும். இரண்டு கோவிலுக்கும் நடந்து செல்ல மலை பாதை வழி இருந்தாலும் பெரும்பாலும் பக்தர்கள் அனைவரும் ரோப் கார் வழியே செல்கிறார்கள். இரு கோவில்களுக்கான  ரோப் கார் பயணம் (போகவும் வரவும்) மற்றும் மானசா கோவிலில் இருந்து சாலை வழியே சண்டி தேவி கோவில் மலை அடிவாரதிற்கு அழைத்து செல்வது மற்றும் திரும்ப சாலை வழியே  அழைத்து வருவது உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 320 க்கு டிக்கட் கட்டணம் வசூலிக்கிறார்கள். .


ரோப் கார் 

ரோப் காரில் மலை உச்சிக்கு சுமார் 1770 அடி பயணம் செய்ய வேண்டும். ரோப் காரில் செல்லும் போதே கீழே ஹரித்வார் நகரத்தின் நிலபரப்பும் கங்கை நதி ஓடும் காட்சியையும் பார்க்கலாம். ஹிமாலய மலைகளிலுள்ள கங்கோத்ரியில் இருந்து துவங்கும் கங்கை நதி முதன் முதலாக சமவெளியில் ஓடுவது ஹரித்வாரிலிருந்து தான்.

மானசா தேவி கோவில் இருக்கும் மலைக்கு பெயர் வில்வ மலை. ஹிந்தியில் 'பில்வ பர்வத்' என்று அழைக்கிறார்கள். 52 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. கஷ்யப முனிவரின் மனதில் தோன்றியதால் அம்மனுக்கு மானசா தேவி என்று நாமம். பக்தர்கள் மனசில் நினைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாலும் அம்மனுக்கு மானசா தேவி என்று பெயர்.  மானசா தேவி ஒரு நாக கடவுளாக வணங்கபடுகிறது. இந்த கோவிலில் இரண்டு மானசா தேவி சன்னதி உள்ளது, ஒரு சன்னதியிலுள்ள அம்மன் சிலைக்கு ஐந்து கைகளும் மூன்று முகங்களும் இருக்கிறது, இன்னொரு அம்மன் சிலைக்கு எட்டு கைகள் தென்படுகிறது.

இந்த கோவிலில் ஒரு புனித மரம் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற கயிரை மரத்தை சுற்றி கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய உடன் மீண்டும் வந்து அந்த கயிரை அவிழ்க்க  வேண்டும்  என சொல்கிறார்கள். மானசா தேவியும் சண்டி தேவியும் பார்வதியின் அமசம் என்றும் சொல்கிறார்கள்.

ஹரித்வார் தவிர பல வட மாநிலங்களிலும் மானசா தேவி கோவில்களை காணலாம். வங்காளம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் மானசா தேவி கோவில்கள் மிகவும் பிரசித்தம்.

'கங்கா ஆர்த்தி

 இன்னொரு முக்கிய அம்சம் ஹரித்வார் கும்பமேளா நடக்கும் ஊர்களில் ஒன்று. இங்குள்ள கங்கை நதிக்கரையில் "ஹர் கி பௌரி" என்று ஒரு இடம் உள்ளது. இதற்கு ஹரனின் காலடி என்பது அர்த்தம் அதாவது "சிவனின் காலடி" என்று பொருள். இந்த இடத்தில் தினமும் மாலை கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்கிறார்கள். பஜனை பாடி ஆரத்தி காண்பித்து மலர் தூவி தீபங்களை கங்கை நதியில் மிதக்க விட்டு பூஜை செய்கிறார்கள். இதற்கு மக்கள பெரும் திரளாக தினமும் மாலை கூடுகிறார்கள். இதற்கு 'கங்கா ஆர்த்தி' என பெயர். ஹரித்வாரில் இதே போன்று கங்கா ஆர்த்தி இன்னும் இரண்டு இடங்களில் தினமும் மாலை கங்கை கரையில் நடைபெறுகிறது, ஆனால சிவன் காலடி என சொல்லப்படும் இந்த இடத்தில் நடக்கும் ஆரத்தி தான் மிகவும் பிரசித்தம். இதே போன்று தினமும் கங்கா  ஆரத்தி நடக்கும் மற்ற இரண்டு ஊர்கள் காசி மற்றும் ரிஷிகேஷ்.  ஏற்கனவே காசியில் நடக்கும் கங்கா ஆரத்தி பற்றி எனது காசி பயண பதிவில் எழுதியுள்ளேன்.

மானசா தேவி கோவில் தரிசனம் முடித்து திரும்பும் வழியிலயே சண்டி தேவி கோவிலுக்கு செல்வதற்கான பஸ் நிற்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியே சண்டி தேவி கோவில் செல்வதற்கான மலை அடிவாரதிற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கிருந்து சற்று தூரம் நடந்து ரோப் கார் இடத்த்கிற்கு செல்ல வேண்டும். அடுத்த பதிவில் சண்டி தேவி கோவில் பற்றி எழுதுகிறேன். 



கருத்துகள் இல்லை: