செவ்வாய், 31 டிசம்பர், 2013

சனி பகவான் கோவில்- ஷிங்க்னாபூர்

சனி பகவான்  ஷிங்க்னாபூர் 

ஷீரடியில் இருந்து சுமார் 74 கி.மீ தூரத்தில் உள்ளது ஷிங்க்னாபூர். இங்கு தான் சனீஸ்வரன் கோவில் உள்ளது. நாம் பக்கத்தில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் இருந்து சற்று மாறுபட்டது இங்கு உள்ள சனீஸ்வரன் கோவில் .சனி பகவான் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். சனிபகவான் ஒரு கல் வடிவத்தில் திறந்த வெளியில் இருக்கிறார். கூரையோ கதவோ கோவிலுக்கு கிடையாது . மழையிலும் வெயிலிலும் எந்த நேரமும் சனி பகவான் மக்களை காப்பாற்றுகிறார் என்று இங்குள்ளவர்கள் நம்புகிறார்கள் ஷிங்க்னாபூர் ஊரில் உள்ள வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது .வெறும் நிலை மட்டுமே உள்ளது .ஆனால் இந்த ஊரில் எந்த திருட்டும் கிடையாது என்று சொல்கிறார்கள். எந்த பொருளானாலும் பூட்டி வைப்பதும் கிடையாது என்று சொல்கிறார்கள் . திருடினால் சனி பகவான் தண்டிப்பார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை யுகோ வங்கி இங்கு 2011 இல் இருந்து கதவுகள் எப்போதும் திறந்தே வைத்திருக்கும் வங்கி கிளையை இந்த ஊரில் நடத்துகிறார்கள் .

ஸ்தலபுராணம் சொல்வது என்னவென்றால் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் ஈட்டி போன்ற கூர்மையான முனை உள்ள கம்பியால் ஒரு கருப்பு நிறத்தில் உள்ள கல்லை தொட்டிருக்கிறான் . அப்பொழுது அந்த கல்லில் இருந்து இரத்தம் வந்திருக்கிறது . இதை பார்த்து வியந்த அந்த சிறுவன் கிராம மக்களை எல்லாம் அழைத்து வந்து காண்பித்திருக்கிறான். அன்று இரவே பல கிராம மக்களின் கனவில் வந்த பகவான் 'நான் சனீஸ்வரன்" என்று கூறினாராம் .அந்த சிறுவன் கனவில் வந்த பகவானிடம் உங்களுக்கு கோவில் எழுப்ப வேண்டுமா என்று கேட்டானாம் . அதற்க்கு சனி பகவான் 'வானமே எனது கூரை 'என்றும் திறந்த வெளியில் தான் இருப்பேன் என்றும் சொன்னாராம் .சனிக்கிழமைகளில் மட்டும் எண்ணை அபிஷேகம் செய்யும்படி கூறினாராம். அன்று முதல் சனிகிழமைகளில் எண்ணை அபிஷேகம் சிறப்பாக செய்யபடுகிறது .பக்தர்களும் எண்ணை வாங்கி பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம் .தவிர சனி பகவான் இந்த ஊரில் திருட்டு பயம் இருக்காது என்றும் திருட்டு கொள்ளை போன்றவைகள் இங்கு நடக்காது என்று கூறினாராம் .இந்த ஊரில் உள்ள வீடுகள்,கடைகள் ,கோவில்கள் எதற்குமே இன்று வரை கதவு கிடையாது . இதை மீறி திருட முயன்றவர்கள் கிராம எல்லையை கடக்கும் முன்பே ரத்த வாந்தி எடுத்ததாகவும் சொல்கிறார்கள் .அல்லது அவர்களுக்கு பைத்தியம் பிடித்தது என்றும் சொல்கிறார்கள் .

திரயோதசி திதி அன்று வரும் சனி கிழமையும் அமாவசை அன்று வரும் சனி கிழமையும் மிக விசேஷமான நாட்களாக இங்கு இருக்கும் .அன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்றும் சொல்கிறார்கள் .திறந்த வெளியில் இருக்கும் 5.5 அடி உயரம் உள்ள கருப்பு நிற கல்லை தான் இங்கு சனி பகவானாக வழிபடுகிறார்கள் . ஒரு திரிசூலம் சனி பகவான் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.சற்று தெற்கு புறமாக  நந்தி சிவன் ,ஹனுமான் சன்னதிகளும் உள்ளது . இவை எல்லாமே திறந்த வெளியில் தான் இருக்கிறது . சனிபகவானுக்கு பின்னால் இருக்கும் வேப்ப மரத்தின் கிளைகள் பகவானின் சிலைக்கு மேல் வளருவதில்லை என்று சொல்கிறார்கள் . அப்படியே வளர்ந்தாலும் தானாகவே பட்டு போய்விடுமாம்.மூல ஸ்தானத்திற்கு எதிரில் ஒரு அணையா விளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது .சனி பகவானின் அபிஷேக நீர் பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாக இந்த பகுதியில் உள்ள மக்கள் பயன் படுத்துகிறார்கள் .உதாசி பாபா என்ற ஒரு சாமியாரின் சமாதியும் இந்த கோவில் உள்ளே இருக்கிறது .உதாசி பாபா இங்கு தங்கி சனி பகவானை பல ஆண்டுகள் சேவித்தாராம் .

கருத்துகள் இல்லை: