வெள்ளி, 3 ஜனவரி, 2014

பஞ்சவதி -நாசிக்


பஞ்சவதி -நாசிக்

ஷீரடியில் இருந்து 83 கி.மீ தொலைவில் உள்ளது நாசிக் .மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு முக்கியமான மாவட்டம் நாசிக் . இங்கு தான் இந்திய அரசாங்கத்தின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகம் உள்ளது. கோதாவரியின் நதி மூலம் த்ரயம்பகேஷ்வர் மலையின் உச்சியில் இருந்து புறப்படுகிறது. த்ரயம்பகேஷ்வர் மலை அடிவாரத்தில் தான் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான த்ரயம்பகேஷ்வர் கோவில் உள்ளது . எனது அடுத்த பதிவில் த்ரயம்பகேஷ்வர்கோவில் குறித்தும் எழுத உள்ளேன் . ராமாயணத்தில் விவரிக்கப்படும் தண்ட ஆரண்யம் இங்கு தான் நடந்தது .ராமன் ,லக்ஷ்மணன் மற்றும் சீதை அவர்களது வன வாசத்தின் போது இங்கு தான் அதிக நாட்கள் வாழ்ந்ததாக சொல்லபடுகிறது . பஞ்சவதி என்றால் அஞ்சு ஆலமரங்கள் என்று பொருள் . இந்த வனபகுதியில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன .அதனால் தான் பஞ்சவதி என்று பெயர் .மேலும் ராவணன் சீதையை இங்கிருந்து தான் கவர்ந்து சென்றதாகவும் சொல்லபடுகிறது . நாசிக் என்று இந்த ஊருக்கு பெயர் வர காரணமே லக்ஷ்மணன் ராவணனின் தங்கை சூர்பணைகியின் மூக்கை இங்கு வைத்து தான் அறுத்தாராம் .வடமொழியில் நாசிகா என்றால் மூக்கு என்று பொருள் .

இந்த ஊரின் மற்றொரு சிறப்பு இந்தியாவில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடக்கும் நான்கு ஊர்களில் நாசிக்கும் ஓன்று . மற்ற மூன்று ஊர்கள் ,ஹரித்வார்,அலஹாபாத் (பிராயாகை) உஜ்ஜைன் ஆகும் .அதாவது அதே ஊரில் கும்பமேளா இரு முறை நடப்பதற்கு இடையில் 12 ஆண்டுகள் இடைவெளி இருக்கும் . ஆனால் கும்பமேளா 3 வருடங்களுக்கு  ஒரு முறை இந்த 4 ஊர்களிலும் சுழற்சி முறையில்  நடக்கும் .அர்த்த கும்பமேளா என்பது 6 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்க கூடியது . இது,ஹரித்வார்,அலஹாபாத் (பிராயாகை) ஊர்களில் மட்டுமே நடக்கும் .

சீதா குகை
சீதா குகை

ஐந்து ஆலமரங்களுக்கு எதிரில் தான் சீதா குகை உள்ளது .இங்கு தான் சீத சில காலம் தங்கியிருந்ததாக சொல்கிறார்கள் . பல வாசல்கள் உள்ள ஒரு குகை இது உள்ளே போக போக வாசல் குறுகலாக்கி கொண்டே போகிறது.கடைசியில் மிக குறுகலான  ஒரு வாசல் இருக்கிறது .அதனுள் நுழைய கிட்டத்தட்ட தவழ்ந்து தான் போக வேண்டும் .உள்ளேன் சென்ற உடன் சற்று விசாலமான ஒரு பகுதி இருக்கிறது . அங்கு தான் சீதா தங்கி இருந்ததாக சொல்கிறார்கள் . இன்னொரு விஷயம் ஒரு இருந்து அடுத்த வாசல் சற்று தாழ்வான பகுதியிலே இருக்கிறது . இதே போல வெளியே வருவதற்கு எதிர் புறம் இதே போன்ற  குறுகிய வாசலில் ஆரம்பித்து கடைசியில் சற்று பெரிய வாசல் வெளியே செல்வதற்கு என்று இருக்கிறது .இந்த குகையில்  தற்பொழுது ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணன் சிலைகள் உள்ளது . இது தவிர குகையின் இடது புறம் ஒரு சிவலிங்கமும் உள்ளது .
சீதை வழிபட்ட சிவா லிங்கம் இது என்று சொல்கிறார்கள் . இங்கிருந்து தான் சீதையை ராவணன் மாரீசனாக வந்து கவர்ந்து சென்றதாக சொல்கிறார்கள் .இன்று சீதா குகையில் மின் விளக்குகள் எரிகிறது .ஆனால் சீதை இருந்த காலத்தில் இவ்வளவு வெளிச்சம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது .

காலாராம் மந்திர் 
காலாராம் மந்திர் 
காலாராம் மந்திர் என்றால் கறுப்பு ராமர் கோவில் என்று பெயர். மிக சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான கோவில் இது .இந்த முழு கோவிலுமே கறுப்பு கற்களினால் கட்டப்பட்டுள்ளது .இங்குள்ள ராமர் சீதா மற்றும் லக்ஷ்மணர் சிலைகள் கறுப்பு கற்களினால் செய்யப்பட்டது . இந்த கோவில் கட்டுவதற்கு 12 ஆண்டுகள் ஆனதாம் .ராமநவமி சீதாநவமி தசரா மற்றும் சித்திரை மாத பிறப்பு  எல்லாம் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது .

ராமகுண்ட்
ராமகுண்ட்

ராமர் கோதாவரியில் குளித்த இடம் தான் ராமகுண்ட் .இங்கு குளித்தால் பாப விமோசனம் உறுதி என்பது நம்பிக்கை . காந்தியின் அஸ்த்தி இங்கு கரைக்கப்பட்டது . காந்திஜியின் அஸ்த்தி இங்கு கரைக்கப்படும் பொழுது நேரு இங்கு வந்திருந்தார். கும்பமேளா நேரத்தில் இங்கு பல்லாயிர கணக்கில் பக்தர்களும் யோகிகளும் இங்கு புனித நீராடுவார்கள் . இங்கு மற்றொரு விஷேசம் என்னவென்றால் அஸ்த்தி கரைத்த உடனே நீர்சுழி  அஸ்த்தியை உள்ளே இழுத்து கொள்ளும் .


கங்கா காட் 
கங்கா காட் 

இறந்தவர்களின் அஸ்த்தி இங்கு கரைக்கப்படுவது மிகவும் புனிதம் என்று கருதப்படுகிறது . இங்கு நீத்தார் இறுதி சடங்குகளும் செய்யபடுகிறது .கும்பமேளா நேரத்தில் கங்கா காட் முழுவதும் விளக்குகளாலும் பூக்களாலும் நிறைந்திருக்கும் .அது ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்று சொல்கிறார்கள் .


கோரா ராம் மந்திர் 
கோரா ராம் மந்திர் 

கோரா ராம் என்றால் வெள்ளை ராமர் என்று பொருள் சீதா குகைக்கு மிக அருகில் உள்ளது கோரா ராம் மந்திர். காலா ராம் மந்திரில்  எல்லா சிலைகளுமே கருப்பாக இருக்கும் .இங்கு எல்லா சிலைகளுமே வெள்ளையாக இருக்கும் .இங்கு ராமர் சீதா லக்ஷ்மணன் பரதன் சத்ருக்னன் மற்றும் ஹனுமான் சிலைகள் உள்ளது .


கபாலீஷ்வர் மந்திர் 
கபாலீஷ்வர் மந்திர்

ராமகுண்ட் அருகில் இருக்கிறது இந்த கோவில் .சிவ பெருமான் தவறுதலாக ஒரு பசுவை கொன்று விடுகிறார் .நந்தி பகவான் சிவபெருமானிடம் அந்த பாவத்தை போக்க நாசிக் சென்று ராமகுண்டில் புனித நீராட சொல்கிறார். ராம்குண்டில் நீராடிய பின்பு சிவா பெருமான் இன்று கோவில் இருக்கும் இடத்தில் அமர்ந்து ஜபம் செய்தாராம் .மிகவும் பழமை வாய்ந்த கோவில் இது .இந்த கோவிலுக்கு மிக அருகிலேயே  கணபதி மாருதி ,மற்றும் காயத்ரி தேவிக்கு சிறு சன்னதிகள் உள்ளது . மற்றொரு முக்கிய அம்சம் இந்த சிவன் கோவிலில் நந்தி கிடையாது .திங்கள் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு இங்கு பிரதோஷ பூஜை செய்யபடுகிறது .இது மிகவும் விசேஷமானது .இங்கு சத்யநாராயண பூஜை செய்வதும் மிகவும் பிரசித்தம் .

இந்த அனைத்து இடங்களும் சேர்ந்த பகுதி தான் பஞ்சவதி என்று அறியபடுவது .இவை அனைத்தும் மிகவும் அருகிலேயே உள்ளது .அனைத்து பஞ்சவதி இடங்களுக்கும் நடந்தே போகிறவர்களும் உண்டு .ஆட்டோவில் அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று காண்பித்து ஆட்டோ ஓட்டுபவரே ஒரு கைடு போல எல்லா விளக்கங்களும் தருகிறார் 

கருத்துகள் இல்லை: