திங்கள், 9 பிப்ரவரி, 2009

பன்னாரி அம்மன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பன்னாரி மாரியம்மன் கோவில்.ஈரோடில் இருந்து 75 கி.மீ தொலைவிலும் சத்யமங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.கோவை,ஈரோடு,திருப்பூர்,அவினாசி போன்ற இடங்களில் இருந்தும் பன்னாரி சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.தற்பொழுது பன்னாரி அம்மன் ஆலயம் இருக்கும் இடம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தன நாயக்கன் காடு என்று அழைக்கப்பட்டது.இங்கு சிறுவர்கள் வழக்கமாக பசுக்களை மேயவிட்டு வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அப்படி மேயப்பட்ட பசுக்களில் ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் கன்றையும் நெருங்கவிடவில்லை ,பாலும் கறக்க அனுமதிக்கவில்லை.மேய்ப்பவன் அந்த பசுவை தொடர்ந்து கண்காணித்து வந்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது.அந்த பசு ஒரு குறிப்பிட்ட வேங்கை மரத்தின் அடியில் போய் நின்ற உடன் தானகவே மடுவில் இருந்து பால் சுரக்க ஆரம்பித்தது.இதை மாடு மேய்க்கும் சிறுவன் தெரிவித்த உடன் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு வந்து வேங்கை மரத்தின் அடி பாகத்தை தோண்டி பார்த்த பொழுது அங்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் இருந்தது.அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு இறை அருள் வந்து அருள் வாக்கு சொல்லி இருக்கிறார்.அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வணிகர்கள் சுமைகளை மாடுகள் மேல் சுமந்து மைசூருக்கு இந்த பாதை வழியாக தான் அப்பொழுது சென்று வந்துள்ளார்கள்.அவ்வாறு செல்லும் வணிகர்களின் காவல் தெய்வம் தான் என்றும் தனக்கு இந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து பன்னாரி அம்மன் என்ற பெயரில் வழிபடவும் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.அன்று முதல் பன்னாரி அம்மனை அந்த பகுதி மக்கள் அங்கு வழி பட்டு வந்திருக்கிறார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் இது.கோவையில் இருந்து மைசூர் செல்லும் பாதையில் சாலை ஓரமாக இந்த ஆலயம் உள்ளது.

மருதமலை முருகன் கோவில்


கோவை அருகே உள்ளது மருதமலை.இது முருக பெருமானின் மற்றொரு பிரபல மலை கோவில்.கோவையில் இருந்து தடாகம் சாலை வழியாக மருதமலை சென்றடையலாம்.மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மருதமலைக்கு போவதற்கு பேரூந்துகள் உள்ளன.மருத மலையில் மிகுந்த அளவில் மருத மரங்கள் உள்ளது.மிகவும் களைப்படைந்த ஒரு முனிவர் மருத மரத்தின் நிழலில் அமர்ந்து தண்ணீர் வேண்டி முருக பெருமானை வேண்டியபொழுது ஒரு மருத மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் பிரவாகம் எடுத்து சுரந்ததாக ஸ்தல வரலாறு.தண்ணீரை பார்த்த முனிவர் மருத ஜலம் வந்ததால் மருதாச்சலபதி என்று முருக பெருமானை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.மலை கோவிலின் இன்னொரு சிறப்பு மலை மேல் இருக்கும் பாம்பாட்டி சித்தர் குகை. பாம்பாட்டி சித்தர் குகையில் அமர்ந்து முருகனை நினைந்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.இங்கு ஒரு பாம்பாட்டி சுனையும் உள்ளது.சித்தர் குகையில் உள்ள நாகராஜர் சுயம்பு என்றும் சொல்லப்படுகிறது.மலை கோவிலுக்கு செல்ல படிகள் உள்ளன. தேவஸ்தான பேரூந்துகளும் உள்ளன.மூல சன்னதிக்கு வெளி புறமாக பக்தர்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய கூடம் உள்ளது. மருத மலையில் இருந்து வரும் மூலிகை காற்றினை இங்கு அமர்ந்து அனுபவிக்கலாம். மலை மேல் முருக பெருமானின் திரு உருவ தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்து பார்த்தால் கோவை நகரின் அழகை காணலாம். மருத மலையில் தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் உள்ளது.